தார்வாட் பேடா (கர்நாடகா)
தேவையானவை: கோதுமை மாவு - ஒன்றரை கப், சர்க்கரை - ஒரு கப், பால், முந்திரித் தூள் (பொடியாக உடைத்துக் கொள்ளவும்) - தலா அரை கப், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: அடிகனமான ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, கோதுமை மாவைப் போட்டு மிதமான தீயில் வாசனை போகும் வரை வறுக்கவும். இதில், சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடம் வறுத்ததும், கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். எல்லாம் ஒன்று திரண்டு, பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, உள்ளங்கையில் சிறிது நெய் தடவிக் கொண்டு, உருண்டைகளாக உருட்டி, முந்திரி தூளில் புரட்டி, தட்டில் வைக்கவும்.

தில்குல் லட்டு (மஹாராஷ்ட்ரா)
தேவையானவை: ஏலக்காய் எசன்ஸ் (அ) ரோஸ் எசன்ஸ் - சிறிதளவு, கொப்பரைத் துருவல், வேர்க்கடலை - தலா கால் கப், வெல்லம் - 250 கிராம், வெள்ளை எள் - அரை கிலோ, நெய் - தேவையான அளவு.
செய்முறை: எள்ளை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். கொப்பரைத் துருவலை பிரவுன் கலரில் வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி, மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில், ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, வெல்லத்தைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. நன்றாக கொதித்து இளம் சிவப்பாக மாறியதும்... வறுத்த எள், கொப்பரைத் துருவல், வேர்க்கடலை, எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். நன்றாக கெட்டியானதும் இறக்கவும். கையில் நெய் தடவிக் கொண்டு, கை பொறுக்கும் சூட்டில் எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும். பார்ப்பதற்கு நம்மூர் பொரி உருண்டை போல இருக்கும்.

ரசகுல்லா (மேற்கு வங்காளம்)
தேவையானவை: கெட்டியான பால் - 8 கப், சர்க்கரை - ஒன்றரை கிலோ, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, குங்குமப்பூ - சிறிதளவு, மைதா மாவு - 8 டீஸ்பூன், சோடா உப்பு - கடுகு அளவு, எலுமிச்சைச் சாறு - கால் கப், தண்ணீர் - 10 கப்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பாலை விட்டு, அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கொதித்ததும் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். உடனே பால் முறிந்துவிடும். அதை இறக்கி, 5 நிமிடம் மூடி வைக்கவும். தண்ணீர் தனியாக பிரிந்து விடும். ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி, முடிச்சுப் போட்டு, உயரமான இடத்தில் கட்டி வைக்கவும். தண்ணீர் முழுவதும் வடிந்ததும் (சுமார் 4 மணி நேரம் கழித்து), மூட்டையை அவிழ்த்து ஒரு தாம்பாளத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். அதனுடன் சோடா உப்பு, மைதா மாவு சேர்த்து உள்ளங்கையால் தேய்த்து, நன்றாகப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டவும். இதைத் திரும்பவும் அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும். ஏற்கெனவே உருட்டி வைத்துள்ள உருண்டைகளில் ஒன்றை அதில் போட்டு பார்த்து... கரையாமல் இருந்தால் ஏழு, எட்டு உருண்டைகளைப் போடவும். கிளறத் தேவையில்லை. உருண்டைகள் தானாகவே மிதந்து வரும். மெல்லிய குச்சியால் ஒருமுறை புரட்டி விடவும். அந்த உருண்டைகளை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதமிருக்கும் உருண்டைகளையும் இதோ போல போட்டு எடுக்கவும்.
பிறகு, சிறிது பாலில் கரைத்த குங்குமப்பூவை, அந்தச் சர்க்கரை தண்ணீரில் சேர்க்கவும். கூடவே, பச்சைக் கற்பூரமும் சேர்த்து இறக்கவும். வேக வைத்து எடுத்த உருண்டைகள் அனைத்தையும் அதில் போட்டு, அப்படியே பரிமாறலாம்.

மித்தா தகி (ஒரிஸ்ஸா)
தேவையானவை: திக்கான பால் - ஒரு லிட்டர், திக்கான தயிர் - 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - கால் கிலோ.
செய்முறை: அடிகனமான கடாயில் பாலை விட்டு, மிதமான தீயில் காய்ச்சவும். பால் பாதியாக சுண்டியதும், பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கி, ஆறவிடவும். மற்றொரு கடாயில் சர்க்கரையைப் போட்டு, அது பழுப்பு நிறத்தில் மாறியதும் காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பாலும், சர்க்கரையும் சேர்ந்து வந்ததும் இறக்கி, தயிரைச் சேர்த்து கலக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் விட்டு, சூரிய வெளிச்சம்படாத இடத்தில் வைத்து, நன்றாக செட் ஆனதும் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

பால் மித்தாய் (உத்தர்காண்ட்)
தேவையானவை: சர்க்கரை சேர்க்காத கோவா - அரை கப், பால் - அரை லிட்டர், நெய் - இரண்டு டீஸ்பூன், சர்க்கரை - ஒன்றரை கப்.
செய்முறை: பால் நன்றாக சுண்டி, சாக்லேட் நிறத்தில் திரண்டு வரும் வரை காய்ச்சவும். பிறகு, சிறிது நெய் விட்டு கோவா, சர்க்கரை (ஜீனி) சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும். தேவைப்பட்டால், சர்க்கரை (ஜீனி) கட்டியை சின்னஞ்சிறு பந்துகள் போல தயாரித்து, அதில் உருட்டி அழகு படுத்தலாம்!

dfd

dfd

சர்க்கரைவள்ளி லெமன் புட்டு
தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு (சுட்டு உதிர்த்துக் கொள்ளவும்) - ஒரு கப், வறுத்த வேர்க்கடலை, எள் பொடி (இரண்டும் சேர்த்து) - கால் கப், கடுகு, பெருங்காயம், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு - சிறிதளவு.

செய்முறை: கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் புரட்டி, உதிர்த்த வள்ளிக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை, எள் பொடிகள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். இறக்கும்போது, எலுமிச்சைச் சாறு விட்டு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.