NAGARAJI B

நீண்ட நாட்கள் வாழ விரும்புகிறவர்களுக்கு உண்மையிலேயே மருத்துவக் குணங்கள் நிரம்பிய மருந்துகள் போல செயல்படும் சில நல்ல உணவுகளை தி அமெரிக்கன் ஜார்னல் ஆஃப் கார்டியலாஜி பட்டியலிட்டுள்ளது.

இந்த உணவுகள் இருதய நோய், புற்றுநோய், முதுமை அடைவதை தாமதப்படுத்துதல், வேறு ஏதேனும் நோய்கள் வந்தால் தனிச்சிறப்புடன் செயல்பட்டு அவற்றைக் குணமாக்குதல் ஆகிய பண்புகளுடன் செயல்படுகின்றன.

முதல் உணவு, பரங்கிக்காய்தான். பரங்கிக்காய், செல்கள் முதுமை அடையாமல் பாதுகாக்கின்றன. புற்றுநோய், இதயநோய் வளர்ச்சியடையாமல் தடுத்துக் குணப்படுத்த இதில் பீட்டாகரோட்டீன் தாராளமாக உள்ளது. கலோரி, கொழுப்பு, சோடியம் உப்பு போன்றவை இதில் குறைவாக உள்ளன. நார்ச்சத்துகள் தாராளமாக உள்ளன. பரங்கி விதையில் மக்னீசியம், இரும்புச் சத்து ஆகியவற்றுடன் புரதச் சத்தும் நன்கு கலந்து உள்ளன.

இரண்டாவது நஞ்சை முறிக்கும் சக்தி நிறைந்த பழம், மாதுளை. உடலில் உள்ள கட்டி, வீக்கம், அழற்சி போன்றவற்றை மாதுளம் பழச்சாறு குணமாக்குகிறது. பிராஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் வந்துவிட்டாலும் தடுக்கிறது. இதயத்திற்கும், மூளைக்கும் நன்கு இரத்தம் கிடைக்கவும் உதவுவதால் தேவையான ஆக்ஸிஜன் உடலுக்கு நன்கு கிடைத்து விடுகிறது. எனவே இளமைத் துடிப்புடன் இதய நோயின்றி வாழலாம். இயன்றபோதெல்லாம் மாதுளம் பழம் சாப்பிடவும். சாறாகவும் அருந்தலாம்.

மூன்றாவதாக லைகோபைன் என்ற ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்த தக்காளி. இதைச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது. நுரையீரல் புற்றுநோய், பிராஸ்டேட் சுரப்பி, மார்பகம் போன்ற உறுப்புகளில் புற்று நோய் தாக்காமல் இந்த லைகோபென் பாதுகாக்கிறது. 3 முதல் 6 தக்காளிப் பழங்களை சாறாக அல்லது சாலட்டாக சேர்த்துக் கொள்ளவும். உடல் பருமனையும், அதிகப் பசியையும் தக்காளி குறைக்கிறது.

நான்காவதாக, வரமிளகாய்த் துவையல். ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமாக வைட்டமின் சி நிறைந்தது. கண்களைப் பாதுகாக்கும். பீட்டா கரோட்டீனும் தாராளமாக இருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். அதிசய மருந்து சிவப்பு மிளகாய். காரக்குழம்பும் நல்லதே.

ஐந்தாவதாக இஞ்சி சேர்த்த தேங்காய் சட்னி, சமையல், சுக்கு தேநீர் என்று இஞ்சியையும் சேர்த்து வரவும். இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோல் என்ற கூட்டுப்பொருள் இரத்தக் கொதிப்பு, ஒற்றைத் தலைவலி, மூட்டு வலி போன்றவற்றைக் குணமாக்குவதுடன் இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவுகிறது. தாம்பத்யத்தில் ஆர்வம், மலட்டுத் தன்மையைக் குணமாக்குதல், மூளையை விழிப்புடன் வைத்திருத்தல் இஞ்சியின் சிறப்பம்சங்களாகும்.

ஆறாவதாக, பசலைக் கீரை உட்பட அடர்நிறத்தில் உள்ள தண்டுக்கீரை, புதினாக்கீரை போன்றவற்றை உணவில் சேர்க்கவும். ஒரு நாள்விட்டு ஒரு நாள் அவித்த பசலைக் கீரையை உணவில் சேர்த்து வரவும். இதனால் வயதாக வயதாக பார்வை மங்குதல், காட்ராக்ட் போன்ற பிரச்னைகளை பசலைக் கீரையில் உள்ள லுட்டைன் (LUTIEN) பாதுகாத்து பார்வைத் திறனை அதிகரிக்கிறது. மேலும் ஆன்ட்டிஆக்ஸிடென்ட்டுகளான வைட்டமின் ஏ, சி, ஈ போன்றவற்றுடன் ஃபோலேட்டும் நிரம்பி வழிகிறது. உறுதியான எலும்பிற்குத் தேவையான கால்சியம், தசை அணுக்களின் ஆரோக்கியத்திற்கான மக்னீசியமும் இந்தக் கீரையில் நிரம்பி வழிகின்றன. பருப்பு, தேங்காய் போன்றவை சேர்த்து பசலைக் கீரையை சமைக்கவும்.

மேற்கண்ட ஆறு உணவுகளில் ஐந்து உணவுகளாவது உணவில் சேர்த்து வந்தால் உங்களை அறியாமலேயே நோய்களிலிருந்தும் முதுமை அடைவதில் இருந்தும் மீண்டு நீண்ட நாள் வாழ்வீர்கள். மற்றவற்றைத் தவிர்த்தாலும் மாதுளம் பழம், பரங்கிவிதைகள், தக்காளி இந்த மூன்றையாவது தினமும் தவறவிடாது சேர்த்து வாருங்கள். வாழ்நாள் முழுநலத்துடனேயே இதனால் அதிகரிக்கும்.

0 comments:

Post a Comment